Tuesday 19 February 2013

வாழ்க்கை !


                               
வாழ்க்கை!   

     அக்காலத்தில் (கி.பி. 1876) கும்பகோணத்திற்கு இருப்புப்பாதை ஏற்படாமையால் திருவாடுதுறையிலிருந்து நான் பெரும்பாலும் கும்பகோணத்துக்கு அடிக்கடி நடந்தே செல்வேன்.
 
      கிட்டத்தட்ட 12 மைல் தூரம் இருக்கும். அங்கே பார்க்க வேண்டியவர்களைப் பார்த்துப் பேசவேண்டியவற்றைப் பேசி விஷயங்களை அறிந்துவருவேன்.

      இரவு கும்பகோணத்தில் தங்கும்படி நேரிட்டால் எனக்கு ஆகாரம் கிடைப்பது கஷ்டமாகிவிடும், தெரிந்தவர் யாரும் இல்லாமையால் எந்த வீட்டுக்கும் போவதில்லை சாப்பாட்டு விடுதியில் போய்ச் சாப்பிக் கையில் பணம் இராது.

      இந்நிலையில் எங்கேனும் தருமத்துக்குச் சாப்பாடு கிடைக்குமா என்று விசாரிப்பேன்.

      கும்பகோணம் மகாமகதீர்த்தின் கீழ்பாலுள்ள அபிமுகேசுவர ஸ்வாமி
¢கோவிலில் தேசாந்தரிகளுக்கு உணவு அளிப்பதற்கு ஒரு தர்மசாலை இருந்தது.

     அங்கு சென்று என் பசியைத் தீர்த்துக்கொண்டு தர்மசாலையை ஏற்படுத்திய மகா புருஷனை மனமார வாழ்த்துவேன்.

      சிலசமயங்களில் நான் யாரைப்பார்க்கப்போவேனோ அவர் என்னோடு நெடுநேரம் பேசியிருந்துவிட்டால் தர்மசாரையில் அகலமாய்விடும்.ஆகாரம் கிடைக்காது….

  
திருவாடுதுறையில் திருக்குளத்தின் வடகரையில் கீழ்மேலாக ஓர் அக்கிரகாரம் உண்டு. சுப்பிரமணிய தேசிகர் உத்தரவால் அதன் வடசிறகில் கீழைக்கோடியில் இரண்டு கட்டுள்ள வசதியான வீடு ஒன்று அமைக்கப்பெற்றது.        

   மடத்திலிருந்து சமான்களை அனுப்பி அவ்வீட்டை தேசிகர் கட்டுவித்தார். அவ்வீடு எதற்காக கட்டப்படுகின்றது என்பது ஒருவருக்கும் தெரியவில்லை..நானும் ஒருவகையாக ஊகித்து அறிந்தேன்.

   ...
ஈசுவர வருஷம் கார்த்திகை மாதத்தில் (நவம்பர் 1877) நாங்கள் புது வீட்டிற்குப்போய் வசிக்கலானோம். எனக்கு உண்டான சந்தோஷத்தைவிட என் தாய் தந்தையர் முதலியோருக்கு பல மடங்கு அதிக மகிழ்ச்சி உண்டாயிற்று.

    
மாதத்துக்கு ஓர் ஊரும் நாளுக்கு ஒரு வீடுமாக அலைந்து நைந்து வாழ்ந்த அவர்களுக்கு ஸ்திரமாக ஓரிடத்தில் வாழும்படி நேரிட்ட வாழ்க்கை இந்திர போகத்தைப் போல இருந்தது.


  - இதே நாளில் பிப்ரவரி 19 (1855) ல் பிறந்த, தமிழ்த் தாத்தா, உ.வே. சாமிநாதய்யர். (உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன்- சுருக்கமாக -.வே.சா) அவர்களின் நினைவைப்போற்றி அவரின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து-