Wednesday 27 March 2013

கனவில் ஏற்பட்டு வளர்ந்த காதல் !

                        கனவில் ஏற்பட்டு வளர்ந்த காதல்
                             ~~~~~~~~~~~~~~~
       காதலனுக்கும் காதலிக்கும் இடையில் ‘கனவிலே காதல் ஏற்பட்டு வளர்ந்தது’ என்பதை நூறாண்டுகளுக்கு முன்னர் தமிழ் இலக்கியம் கண்டதை நம்மில் பலர் அறிந்திருக்கமாட்டோம்!

அறிந்துகொள்வோமா?

        அது ஒரு நாடக இலக்கியம். முழுவதும் கவிதையாய் எழுதப்பட்ட ஒன்று.

 நாடகத்தின் சுருக்கம் இதுதான்-

     பாண்டிய மன்னன் சீவகன் வஞ்சகமும் சுயநலமும் மொத்த உருவான அமைச்சன் குடிலன் என்பவனால் பல இன்னல்களுக்கு ஆளாகின்றான்.
     பாண்டிய இளவரசியும் சேர நாட்டு மன்னன் புருடோத்தமனும் ஒருவரை ஒருவர் தத்தம் கனவில் காண்கின்றனர்; இருவரும் ஒருவர் மீது ஒருவர் கனவிலேயே காதல் கொள்கின்றனர். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் கனவு வளர வளர காதலும் வளர்ந்தது.

      இந்நிலையில், நாட்டையே கவரும் நோக்கில்  மன்னன் சீவகனின் ஒரே மகளான இளவரசியைத் தன் மகனுக்கு மணமுடிக்கவும் அமைச்சன் திட்டம் தீட்டியவேளையில், பாண்டிய மன்னனுக்கு அமைச்சனால் கேடுவர இருப்பதை உணர்ந்து மன்னனைக் காக்க முற்பட்டு அதில் வெற்றியும் அடைகின்றார்    அரச குரு சுந்தர முனிவர்.

       இறுதியில், தத்தம் கனவில் கண்டு மகிழ்ந்த நாயகனும் நாயகியும்  நேரில் சந்தித்து வாழ்க்கையில் இணைகின்றனர். அமைச்சனின் தீய குணமும், சூழ்ச்சியும் மன்னனுக்கு வெளிப்பட, அரசகுரு சுந்தர முனிவரால் மன்னன் தெளிவு பெறுகிறான்.
       இந்நாடக இலக்கியத்தை இயற்றிவர், பேராசிரியர்பெ.சுந்தரம் பிள்ளை அவர்கள். கதையில் வரும் பாண்டிய இளவரசியின் பெயர்-மனோன்மணி.
       ஆம், உங்கள் யூகம் சரிதான். அவ்விலக்கியத்தின் பெயர் ‘‘மனோன்மணியம்’’.


     சுந்தரம் பிள்ளையின் ஞான குருவாகிய கோடகநல்லூர் சுந்தர சுவாமிகளின் மீதிருந்த பற்றின் காரணமாய் மனோன்மணியத்தில்சுந்தர முனிவர்’ என்னும் கதாபாத்திரத்தை உருவாக்கியிருந்தார் பேராசிரியர் பெ.சுந்தரம் பிள்ளை.

      ‘மனோன்மணியம்’தமிழ் மொழியில் தோன்றிய நாடக இலக்கியங்களில் முதன்மையானதாகப் போற்றப்படுகின்றது. முழுவதுமாய் செய்யுள்  நடையில் அமைந்த இந்நூல் சுந்தரம் பிள்ளை அவர்களால்  கி.பி. 1891ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

      இதில் மற்றொரு சிறப்பும் இருக்கின்றது.   தமது நாடக நூலான மனோன்மணியத்திற்காக,  50 வரிகளுக்கும் மேற்பட்டதமிழ்த் தெய்வ வணக்க’ பாடலாக சுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றிய பாடலின் சுருக்கமே தற்போது தமிழ்கூறும் நல்லுலகமெங்கும் பாடப்படும்தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலான

‘‘நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!"
என்பதே அது.

            இப்பாடல், சுருக்கப்பட்டு தமிழ் நாடு அரசால் தமிழ்த்தாய் வாழ்த்துப்  பாடலாக 1970 ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்டது.

             122 ஆண்டுகளுக்கு முன்னர் இதே மார்ச் மாதத்தில்தான் தமிழ் மொழியின்  நாடக இலக்கியங்களில் முதன்மையான ‘மனோன்மணியம்’ பேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை அவர்களால் எழுதி வெளியிடப்பட்டது, அதன்மூலமாய் இப்போதைய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலும் வெளிவந்தது.
                            *************

(ஓவியம், ஓவியர்- ம.செ. வினுடையது என்னால் எடுத்தாளப்பட்டது)

Monday 18 March 2013

‘‘தமிழ் மொழியைக் காப்போம்’’, ‘’தமிழ் மொழியை வளர்ப்போம்’’ இவற்றில் எது சரியானதாகும்?


‘‘தமிழ்  மொழியைக் காப்போம்’’, ‘’தமிழ்  மொழியை வளர்ப்போம்’’

இவற்றில் எது சரியானதாகும்?

  
நண்பர் ஒருவர்
facebookல், இனிய தமிழ் மொழியின் மீது தனக்கிருக்கும் மட்டற்ற பற்றின் காரணமாய்,
      
                            
‘‘ ‎
தமிழை வளர்ப்போம், தமிழை வளர்ப்போம்
                                என்று அறைகூவல் விடும்
                அத்துனை தமிழ் ஆர்வளர்களுக்கும்
                நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன்...

                தமிழை வளர்ப்பதற்கு அது,

                பதர் நீக்கிய விதையைப் பதிய மிட்டு,
                அதற்கு பல நாள் தண்ணீர் விட்டு,
                வாடிப் போய் வளராத விதையல்ல..!

                ஆழ வளர்ந்து,
                அகலப் படர்ந்து,
                அத்துனை தமிழனையும்
                அரவணைக்கும் சக்தி
                கொண்ட ஆலமரம்..!

                அது வளர்க்கப்பட வேண்டியதில்லை - கொஞ்சம்
                அழியாது காக்கப் பட வேண்டும்..! ’
 என்று கூறியிருந்தார்.
  
         
மேலெழுந்தவாரியாகப் பார்க்கையில் நண்பர்
சொன்னது
நன்று என்றே தோன்றும்!

    ஆயினும் ஆராய்ந்து பார்க்கும்போது மிகப்பெரிய வேறுபாடு இருப்பதை அறியலாம்.

     
காக்கப்படுதல்
என்பது ஒன்றிற்கு எவ்விதத்திலும் தீங்கு, அழிவு, சேதம் போன்றவை நேராமல் தடுக்கும்படியாய்  காவல்’ அல்லதுகண்காணிப்பு’ செய்வது ஆகும். அதாவது ஒன்றை உள்ளது உள்ளபடியே இருக்கச்செய்வது என்ற நிலையைக் குறிப்பதாகின்றது.      

              
இதனடிப்படையில் நோக்கும்போது ‘தமிழ்  மொழியைக் காப்போம்’ என்பது தமிழ்  மொழியானது தற்போது ‘உள்ளது உள்ளபடியே’ என்ற நிலையில் இருக்க உதவுவது என்றாகிவிடுகின்றது.

      
அதாவது, தமிழ்  மொழியில் அதன் இலக்கியத்தில்
வளர்ச்சியற்ற தன்மைக்கு வித்திட்டு சம்ஸ்கிருத மொழியைப்போன்ற வழக்கில் இல்லாத மொழியாக்கிவிடும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாகின்றது.

              
ஆனால், ‘வளர்ப்போம்’ என்று குறிப்பிடும்போது அதில் ஒரு சிறப்பு இருப்பதை அறியமுடிகின்றது.  

  
   
வளர்ச்சி’ எனும் சொல் "தன்னுடைய தற்போதைய நிலையிலிருந்து அதிகரித்து அடுத்த நிலையை அடையும் முறை" என்றும் பொருள் தரும்.

       
நண்பர் குறிப்பிடும் ஆலமரமாகட்டும்
அல்லது வேறு எவ்வகைத் தாவரமாகட்டும் அவையாவும் வளர்ந்துகொண்டே இருப்பனதானே!

 
       மேலும், வளர்ச்சி எனும் சொல்லானது தோன்றிய ஒன்று தானே வளர்ந்து நிற்பதைக்கூடக் குறிக்கும். எனினும், வளர்ந்தாலும் அது அழியாமல் நிலைபெற்று இருக்கக்கூடிய வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும்.

   
ஆனால், ‘வளர்ப்பது’ என்ற சொல் தானே வளர்ச்சியை அடையக்கூடிய ஒன்றாய் இருந்தாலும் அது அவ்வாறு வளரவும், அதற்கு எவ்வகைத் தீங்கும் நேராது, நிலைபெற்று தழைத்தோங்கப் பிறரால் பாதுகாத்து வளர்க்கப்படுவதையே குறிக்கின்றது. அதாவது வளர்ச்சியுடன் உரிய காத்தலும் இருக்கின்றதை உணர்த்துகின்றது.

         இதுவே ‘வளர்ப்போம்’ என்பதன் தனிச் சிறப்பாக அமைகின்றது.

     
எனவே, ‘தமிழ்  மொழியைக் காப்போம்’ - தற்போது ‘உள்ளது
உள்ளபடியே’ என்ற நிலையில் அதனை இருக்கச் செய்வோம்- எனக் கூறுவதைதைவிட, தமிழ்மொழி தொடர்ந்து இலக்கிய வளர்ச்சிதனைப் பெற்று நிலையாகத் தழைத்தோங்கச் செய்வோம் எனும்விதமாய்  "தமிழ்  மொழியை வளர்ப்போம்" என்று கூறுவதே சரியாக இருக்கின்றது.


                                                                           ######